ஒரு பாட்டுக்கு ஆடக்கூடாது என்பது என் பாலிஸி. அதை யாருக்காகவும் நான் மாற்றிக் கொள்ள முடியாது. விஜய்யின் வில்லு படத்திலும் அதனால்தான் நடிக்க மறுத்தேன் என்கிறார் திவ்யா என்ற ரம்யா.
வில்லு படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட பெரும் தொகை கொடுப்பதாக இயக்குனர் பிரபு தேவா திவ்யாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், இந்த வாய்ப்பை ஏற்க உடனடியாக மறுத்துவிட்டார் திவ்யா.
இது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வளரும் நடிகை ஒருவர் இவ்வளவு பெரிய வாய்ப்பை மறுத்தது பெரிதாகப் பேசப்பட்டது. இதுகுறித்து திவ்யா கூறுகையில்,
எனக்கு பணம் பெரிதல்ல. வித்தியாசமான நல்ல வேடங்கள்தான் முக்கியம்.
வாரணம் ஆயிரம் படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்ததாக என்னைப் பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை ஏற்கவே விரும்புகிறேன். விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன். வில்லு படத்தில் ஒரு பாடலுக்கு ஆட மறுத்தது உண்மைதான். கண்டிப்பாக ஒரு பாட்டுக்கு மட்டும் நான் ஆடி நடிக்க மாட்டேன். ஹீரோயின் வேடத்தில் மட்டுமே நடிப்பேன்.
அடுத்ததாக காதல் டு கல்யாணம் படத்தில் நடிக்கிறேன். மணிரத்னத்தின் உதவியாளர் மிலின்த் ராவ் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறேன்.
இது முழுக்க காமெடியான குடும்ப கதை. கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் வேடம். சிறிதும் கலாசார சம்பந்தமே இல்லாத இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், காதலிக்கிறார்கள். இதன் விளைவுகளை ஜாலியாக சொல்கிறது இந்தப் படம். தற்போது கன்னடத்தில் இரு படங்களிலும் நடித்து வருகிறேன் என்றார் திவ்யா.
நன்றி.கேசரி
கருத்துரையிடுக