கொழும்புக் கோட்டையில் வெல்லவீதி பிரதேசத்தில் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒரு தற்கொலைதாரி எனவும் அந்த நபரிடம் இருந்து தற்கொலை அங்கி ஒன்றையும் தாம் மீட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தேக நபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொள்ளும் வைபவம் ஒன்றில் வைத்து அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்த சின்னத்தம்பி பகலவன் என்ற 24 வயதான சந்தேக நபர், தாக்குதல் நடத்தும் நோக்கில் சில வாரங்களுக்கு முன்னரே கொழும்புக்கு சென்றுள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சந்தேக நபர் முல்லைத்தீவில் இருந்து காட்டு வழியாக வவுனியாவுக்கு சென்று அங்கிருந்து கொழும்பு சென்றுள்ளார்.
காவற்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த இந்த சந்தேக நபர், கொழும்பில் மறைத்து வைத்துள்ள வெடிப் பொருட்களை காவற்துறையினருக்கு அடையாளம் காண்பிக்க சென்றவேளை, காவற்துறையினரை தாக்;கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போதே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.
கருத்துரையிடுக